விஸ்கி அடித்து விழுந்து இறந்தாரா உல்மர்?
லண்டன்:பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மர், கழுத்து நெரித்துக் கொல்லப்படவில்லை. அதிக அளவில் விஸ்கி சாப்பிட்டு, நிலை தடுமாறி விழுந்து, கழுத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் என புதிய தகவல் கிளம்பியுள்ளது.
உல்மர் மரணம் தொடர்பாக நாளுக்கு நாள் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அவர் கொலை செய்யப்பட்டார் என முதலில் கூறப்பட்டது. கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டதாக பின்னர் கூறப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு அவர் ஹோட்டல் டவலால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாகிஸ்தான் அணி சந்தித்த அதிர்ச்சித் தோல்வியால் மனம் உடைந்த பாப் உல்மர், விஸ்கி சாப்பிட்டுள்ளார். அதிக அளவில் சாப்பிட்டதால் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அப்போது அவரது கழுத்தில் அடிபட்டு மரணமடைந்துள்ளார் என புதிய தகவல் கூறுகிறது.
இதுகுறித்து லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தி:
பாப் உல்மர் இறந்த அன்று அவர் இருந்த நிலையைப் பார்த்த ஒருவர் கூறியுள்ள தகவல் இது. தான் தங்கியிருந்த ஹோட்டல் பாரில் மிகுந்த சோகத்தோடு தனியாக அமர்ந்திருந்தார் உல்மர். ஜானி வாக்கர் பிளாக் லேபல் விஸ்கியை அளவுக்கு அதிகமாக அவர் குடித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் அங்கிருந்து எழுந்து சென்றார். அதன் பின்னர்தான் அவர் மரணமடைந்தார். எனவே அறைக்குத் திரும்பிய பின்னர் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்திருக்க வேண்டும். அப்போது கழுத்து எலும்பில் அடிபட்டு அவர் இறந்திருக்கக் கூடும் என டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி கூறுகிறது.
இதுதவிர இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. அயர்லாந்து அணியுடன் பாகிஸ்தான் மோதி தோல்வி அடைந்தாதல் உல்மர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணியினரிடம் சோகம் ஏதும் இல்லை.
மாறாக அன்று இரவு பாகிஸ்தான் அணியினர் ஜாலியாக, கார் டீலரும், மிகப் பெரிய கோடீஸ்வரருமான தாரிக் மாலிக்கின் வீட்டுக்கு சாப்பாட்டுக்குக் கிளம்பியுள்ளனர். உல்மரை தங்களுடன் அழைத்துச் செல்லவில்லையாம். இதுவும் உல்மருக்கு சோகத்தைக் கூட்டியுள்ளது.
இதுகுறித்து தாரிக் மாலிக் கூறுகையில், உல்மர் உள்பட அனைவருமே அன்று இரவு விருந்துக்கு வருவதாக இருந்தது. ஆனால் உல்மர் திடீரென இறந்து விட்டதால் அந்த விருந்து ரத்து செய்யப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.
மாலிக்கை விசாரிக்க விரும்பிய ஜமைக்கா போலீஸார் அவரை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் இதுவரை மாலிக் விசாரணைக்கு வராமல் உள்ளனர்.