மூத்த இந்திய வீரர்கள் மாபியா கும்பல்- சேப்பல்
டெல்லி:இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் மாபியா கும்பல் போல் செயல்படுகிறார்கள் என பயிற்சியாளர் சேப்பல் கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறிவிட்ட நிலையில் அணியின் மோசமான தோல்வி குறித்து வரும் 6 மற்றும் 7ம் தேதிகளில் மும்பையில் நடைபெறும் இந்திய கிரிக்கெட் போர்டு செயற்குழு கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தாக்கல் செய்யப் போகும் அறிக்கை மிக முக்கியமாக கருதப்படுகிறது. 6ம் தேதி அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தனது அறிக்கையில் சீனியர் வீரர்களை சேப்பல் ஒரு பிடி பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது அறிக்கையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதற்கு சீனியர் வீரர்கள் முட்டுகட்டையாக இருந்தனர். தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற சுயநலத்தால் அவ்வாறு நடந்து கொண்டனர்.
சீனியர் வீரர்கள் ஒரு மாபியா கும்பல் போல் செயல்படுகிறார்கள். கேப்டன் டிராவிட்டுக்கும் அவர்கள் நெருக்கடி அளிக்கிறார்கள்.
நடுவில் இறங்கி விளையாட சச்சின் முரண்டு பிடித்தார். ஓபனிங் தான் செய்வேன் என்று தொல்ைல தந்தார் என மூத்தவர்கள் தந்த தொல்லைகளை புட்டு புட்டு வைக்கவுள்ளார் சேப்பல்.
ஏற்கனவே கங்குலி மீது ஒரு இமெயில் கடிதத்தால் அவரது கேப்டன் பதவிக்கு உலை வைத்தவர் சேப்பல்.
உலக கோப்பை போட்டியுடன் சேப்பலின் பதவி காலம் முடிகிறது. மறுபடியும் அவரை நீட்டிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பமில்லை என தெரிகிறது.
எனவே சேப்பல் விடை பெறும் முன் பல சீனியர் வீரர்களின் தலை உருளலாம். பலரது தலைவிதியை நிர்ணயிக்கும் செயற்குழு கூட்டம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந் நிலையில் தன்னைப் பற்றி நாள்தோறும் பல்வேறு தகவல்கள் வெளியாகிவருவதால் அவர் எரிச்சலாகியுள்ளா சேப்பல், கிரிக்கெட் நிர்வாகத்திற்கு தொடர்புடைய சிலர் என்னுடைய புகழக்கு களங்கம் விளைவி்க்கின்றனர் என தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் நான் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. எனது எதிர்காலம் கிரிக்கெட் போர்டு கையில் உள்ளது. இந்திய வீரர்கள் நடவடிக்கை குறித்து கிரிக்கெட் போர்டு நிர்வாகிகளுடன் எதுவும் பேசவில்லை என்றார.
நானாகவே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகமாட்டேன். அதைப்பற்றி கிரிக்கெட் வாரியம் முடிவு செய்ய வேண்டும் என்றார்.