இமாச்சல், காஷ்மீர், பஞ்சாபில் நிலநடுக்கம்
ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீ நகர் மற்றும் அதன் சுற்றுப் புறப் பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. பூகம்பத்தையடுத்து மக்கள் வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியே ஓடிவந்தனர்.
ரிக்டர் அளவுகோலில் இது 5.9 ரிக்டராக பதிவானது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத் தொடரில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தின் அளவு 6.2 ரிக்டராக பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தில் உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
பசிபிக் கடலில் உள்ள சாலமன் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி அலைத் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் வட மாநிலங்களில் ஏற்பட்ட பூகம்பம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.