ஏப். 14 முதல் சென்னை ரேஷன் கடைகளில்பாமாயில், பருப்பு, ரவா, மைதா விற்பனை!
சென்னை:தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி முதல் சென்னை நகரில் உள்ள ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பாமாயில், பருப்பு வகைகள், ரவா, மைதா ஆகியவை விற்பனை செய்யப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்திற்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளியோருக்கு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரிசி விலை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
இதேபோல, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பாதிப்படையாமல் இருக்க அவற்றையும் ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி முதல் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில், பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவா, மைதா ஆகியவை நியாய விலையில் வழங்கப்படும்.
மே முதல் வாரத்திலிருந்து தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை திமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.