அயர்லாந்தை அயர வைத்த தெ.ஆப்பிரிக்கா
ஜார்ஜ்டவுண்:பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மூலம் அயர்லாந்து அணியை அதிர வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.
ஜார்ஜ்டவுணில் நடந்த சூப்பர் எட்டு போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், அயர்லாந்தும் மோதின. முதலில் அயர்லாந்து பேட்டிங் செய்தது. மழை காரணமாக 35 ஓவர்கள் மட்டும் விளையாட தீர்மானிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து வீரர்கள் திணறினர். இயான் மார்கன் (28), ஓ பிரையன் (25), ஆண்ட்ரூ ஒயிட் (30) ஆகியோர் மட்டும் கொஞ்சம் சுமாராக ஆடி ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் அனவைரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
இதனால் 35 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு அயர்லாந்து 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
பின்னர் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கான வெற்றி இலக்கு 35 ஓவர்களில் 160 என நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க ஆட்டக்காரர் வில்லியர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் பின்னர் வந்த கேப்டன் ஸ்மித் சிறப்பாக ஆடி 41 ரன்கள் எடுத்தார். ஆனால் ஜேக்கஸ் கல்லிஸ்தான் சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய அவர் ஆட்டமிழக்காமல் 66 ரன்களைக் குவித்தார்.
அதேபோல ஆஷ்வல் பிரின்ஸும் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்தார். இறுதியில் 31.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து தென் ஆப்பிரிக்கா அணி 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் அரை இறுதிக்கான வாய்ப்பை அந்த அணி ஸ்திரப்படுத்தியுள்ளது. அடுத்த போட்டியில் வங்கதேசத்தை தென் ஆப்பிரிக்கா சந்திக்கிறது. இதிலும் எளிதிலும் வென்று எதிர்பார்க்கப்படுகிறது.