மகாராஷ்டிரா, கர்நாடகா, கொல்கத்தாவில் மட்டும்தான் கிரிக்கெட் விளையாடுகிறார்களா? லாலு டென்ஷன்
டெல்லி:கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதில் சில மாநிலங்களுக்கு மட்டுமே தொடர்ந்து வாய்ப்பு தரப்படுகிறது. மற்ற மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கோபமாக கூறியுள்ளார்.
டெல்லியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 72 இருக்கைகள் கொண்ட ஏசி மூன்றடுக்குப் பெட்டியைப் பார்வையிட்ட லாலு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவரது பேச்சு கிரிக்கெட் பக்கம் திரும்பியது. லாலு கூறுகையில், கிரிக்கெட் வீரர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் மேற்கொள்ளும் கொள்கை மிகவும் பாரபட்சமாக உள்ளது.
சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே அது முக்கியத்துவம் தருகிறது. பிற மாநிலங்களை கண்டுகொள்வதே இல்லை.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கொல்கத்தாவில் மட்டும்தான் கிரிக்கெட் விளையாடுகிறார்களா? மற்ற பகுதிகளில் யாரும் கிரிக்கெட் விளையாவடுதே இல்லையா?
உலகக் கோப்பைக் கிரிக்கெட் அணியில் முகம்மது கைப்பை ஏன் சேர்க்கவில்லை? அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீரர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அணி உருப்படும்.
மற்ற மாநிலங்களிலும் நல்ல வீரர்கள் நிறையவே உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மறுப்பது நியாயமற்றது.
விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான். இருந்தாலும் உலகக் கோப்பைப் போட்டியில் பெற்ற தோல்வியிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அணியில் நிறைய இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் என்றார் லாலு.
பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் லாலு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.