சார்க் நாடுகளில் ஒரே நாணயம்: இலங்கை யோசனை
டெல்லி:ஐரோப்பிய யூனியனில் உள்ளதைப் போல சார்க் நாடுகளிலும் ஒரே மாதிரியான நாணய முறையை அமல்படுத்த வேண்டும் என்று இலங்கை யோசனை தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று தொடங்கிய 14வது சார்க் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக் ஷே பேசுகையில், சார்க் பிராந்தியம் முழுமைக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து சார்க் நாடுகளும் இணைந்து தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
உலக அளவிலான மிரட்டலாக தீவிரவாதம் உருவாகி வருகிறது. இதை ஒடுக்க கூட்டு நடவடிக்கை வேண்டும். பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யாமல், வளர்ச்சி குறித்து நாம் யோசிக்க முடியாது.
இதேபோல சார்க் நாடுகள் அனைத்துக்கும் பொதுவான ஒரே நாணய முறையை உருவாக்க வேண்டும். இதன் மூலம் இப்பிராந்தியத்தில் தடையற்ற, தடங்கல்களற்ற வர்த்தகத்தை மேற்கொள்ள முடியும்.
சார்க் அமைப்பு ஒரு யூனியனாக (ஐரோப்பிய யூனியனைப் போல) உருவாக வேண்டும். இதன் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பிராந்தியத்தை முன்னேற்ற முடியும்.
சார்க் நாடுகளில் நிலவும் இன்னொரு முக்கியப் பிரச்சினை வறுமை. ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களை உயர்த்த சீரிய முறையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்றார் ராஜபக் ஷே.