விதியை மீறிய மல்ட்டிபிளக்ஸ்-சிஎம்டிஏ நோட்டீஸ்
சென்னை:சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள சிட்டி சென்டர் மல்ட்டிபிளக்ஸ் கட்டட வளாகம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதால் அதை இடிக்க முடிவு செய்துள்ள சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழமம் (சிஎம்டிஏ) கட்டடத்தில் உள்ள நிறுவனங்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை நகரின் முக்கியப் பகுதியான ராதாகிருஷ்ணன் சாலையில், சிட்டி சென்டர் என்ற பெயரில் ஒரு மல்ட்டிபிளக்ஸ் சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு ஐனாக்ஸ் என்ற அதி சொகுசு திரையரங்கம், லேண்ட்மார்க் புத்தக நிலையம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.
இந்த கட்டடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகவும், பல விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாகவும் சிஎம்டிஏ குற்றம் சாட்டியுள்ளது.
கட்டட வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது போல கட்டடம் கட்டப்படாமல் பல மாற்றங்களுடன் கட்டப்பட்டுள்ளால் கட்டடத்தை ஏன் இடிக்கக் கூடாது என்று கேட்டு கடந்த அக்டோபர் மாதம் சிஎம்டிஏ நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் இந்த நோட்டீஸுக்கு சிட்டி சென்டர் உரிமையாளர்கள் பதில் தரவில்லை. இதையடுத்து தற்போது இந்தக் கட்டடத்தை இடிக்கவுள்ளதாகவும், அதற்கு வசதியாக கட்டடத்தில் வள்ள அனைத்து நிறுவனங்களும் காலி செய்ய வேண்டும் எனவும் கூறி சிஎம்டிஏ புதிதாக ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அடுத்த கட்டமாக மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் சிஎம்டிஏ அறிவித்துள்ளது.