சென்னை-காவல்நிலையம் அருகே வாலிபர் படுகொலை
சென்னை:சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே திரைப்படத் துறையில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். திரைப்படத் துறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு தனது காரில் திரும்பினார்.
தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே காரை நிறுத்தி விட்டு அங்கேயே தூங்கினார். அப்போது ஒரு கும்பல் அங்கு வந்தது. காரை சரமாரியாக அடித்து நொறுக்கிய அக்கும்பல், வெங்கடேஷையும் சரமாரியாக தாக்கியது.
அவர்களிடமிருந்து தப்ப காவல் நிலையத்தை நோக்கி ஓடினார் வெங்கடேஷ். ஆனால் அக்கும்பல் வெங்கடேஷை துரத்தி துரத்தி அடித்துக் கொன்று விட்டு தப்பி ஓடியது.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காவல் நிலையம் அருகிலேயே விரட்டி விரட்டி வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.