பயங்கர ஆயுதங்களுடன் கும்பல் கைது
சென்னை:பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிப்பதற்காக ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.
சென்னை வால்டாக்ஸ் சாலையில், உள்ள ஒரு ஹோட்டலில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்தது.
போலீஸாரைப் பார்த்ததும் அக்கும்பல் அரிவாள்களால் போலீஸாரை தாக்க முயற்சித்தனர். ஆனால் போலீஸார் துணிச்சலுடன் செயல்பட்டு அவர்கள் ஆறு பேரையும் மடக்கிப் பிடித்தனர். துப்பாக்கி முனையில் 6 பேரையும் பிடித்த போலீஸார் அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், பிடிபட்டவர்கள், மகாகவி பாரதி நகரைச் சேர்ந்த பாஸ்கர், திருவொற்றியூரைச் சேர்ந்த ரவி, கொருக்குப்பேட்டையச் சேர்ந்த அசோக், பிரகாஷ், வெங்கடேசன், செந்தில்குமார் என்பது தெரிய வந்தது.
செளகார்பேட்டையில் உள்ள நகைக் கடைகளை குறி வைத்து கொள்ளையடிக்க வந்திருந்த அக்கும்பல், நகைக் கடை ஊழியர்கள், நகைகளுடன் செல்லும்போது வளைத்துப் பிடித்துக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
பிடிபட்டவர்களில் அசோக், பிரகாஷ் ஆகியோர் மீது கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். வெங்கடேசன், ரவி, பாஸ்கர் ஆகியோர் மீது சிறு சிறு வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.