சொந்த நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடும்டி.ஆர்.பாலு: ஜெ. பாய்ச்சல்
சென்னை:காவிரிப் படுகையிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவை தனது சொந்த நிறுவனங்களுக்கு வழங்கக் கோரி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை நிர்ப்பந்தப்படுத்துகிறார் மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர். பாலு என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஆண்டு ஜூன் மாதம் டி.ஆர் பாலுவும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் முரளி தியோராவும் ஒரு அதிகாரப்பூர்வ சந்திப்பினை நடத்தியுள்ளனர்.
அதில் தமிழகத்திற்கு என்ன நல்லது நடக்க வேண்டும் என்பது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதற்கு பதிலாக டி.ஆர். பாலுவின் நிறுவனங்களாகிய கிங் கெமிக்கல்ஸ் மற்றும் கிங் ஹை பவர் ஆகிய இரு நிறுவனங்களுக்கு காவிரி படுகையில் கிடைக்கின்ற இயற்கை வாயுவை எப்படி தனது நிறுவனங்களுக்கு விநியோகம் செய்வது, ஏன் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஆகிறது, ஏற்கனவே விநியோகத்தை விட தற்போது இன்னும் அதிகமாக தர வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதனுடைய பின் தொடர்ச்சியாக டி.ஆர்.பாலு, ஜி.எ.ஐ.எல். என்ற மத்திய அரசு நிறுவனத்தினுடைய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரை அழைத்து தனது இரண்டு தொழிற்சாலைகளுக்கும் உடனடியாக காஸ் விநியோகம் தேவை என்று சொல்லிய விவரத்தை இந்நிறுவன தலைவர் டாக்டர் யுடி.செளபே என்பவருக்கு எழுதிய கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனது ஆட்சியில் பைக்காரா மின் திட்டம் என்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த மின் திட்டத்திற்கான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சத்தின் கோப்பை ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டு, தமிழகத்திற்கு பெருத்த பொருள் நஷ்டத்தையும், திட்டம் நிறைவேற மிகுந்த காலதாமதத்தையும் உருவாக்கிய திமுகவைச் சேர்ந்த இந்த மத்திய அமைச்சர்,உச்சநீதிமன்றத்திற்கு எனது அரசு சென்று உத்தரவு பெற வேண்டிய நிலைமையை ஏற்படுத்திய இதே அமைச்சர், தனது குடும்ப நிறுவனங்களுக்காக உடனடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், மக்கள் பொது சொத்தான, காஸ் தனது இரு நிறுவனங்களுக்கு தந்தே தீர வேணடும் என்பதற்காக அதிகாரிகளை கூப்பிடுகிறார், உத்தரவிடுகிறார், திரும்பத் திரும்ப பேசுகிறார்.
இதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம். டி.ஆர்.பாலு தமிழகம் வரும் போதெல்லாம் பத்திரிக்கை நிருபர்களும், மக்களும் இது குறித்து இவரிடம் கேள்வி கேட்கட்டும். இவர் என்ன பதில் செல்கிறார் என்று பார்ப்போம் .
இனிமேல் திமுகவினரின் ஊழல்களை தினசரி ஆதாரங்களோடு, பத்திரிக்கைகளுக்கும், டிவிகளுக்கும் கொடுக்கப் போகிறேன். அதை சந்திக்க அவர்கள் தயாரா என்பதை விளக்கட்டும் என்று பார்ப்போம் என ஜெயலலிதா கூறியுள்ளார்.