ஓட்டுக்காக தடம் மாறும் ஜெ.: கருணாநிதி
சென்னை:கல்வி மற்றும் அரசுப் பணியில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது ஓட்டு வங்கியை மனதில் வைத்துத்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் முதல்வர் கருணாநிதி நேற்று பேசுகையில், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோருக்கு கல்வி மற்றும் அரசுப் பணியில் தனி இட ஒதுக்கீடு வழங்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதற்கு திமுக தோழமைக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. யாரும் எதிர்பாராத வகையில், எதிர்க்கட்சியான அதிமுகவும் ஆதரவு தெரிவித்தது.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டு சட்ட மதோதா தாக்கல் செய்யப்பட்டபோது அதை கடுமையாக எதிர்த்தவர் ஜெயலலிதா.
ஆனால் இப்போது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை மனதில் கொண்டு தனது நிலையிலிருந்து மாறியுள்ளார். அதனால்தான் தனது கட்சி எம்.எல்.ஏக்களை விட்டு இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க கூறியுள்ளார் என்றார் கருணாநிதி.