உ.பி முஸ்லீம்கள்: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை
லக்னோ:உ.பி. மாநிலத்தில் இனியும் முஸ்லீம்களை சிறுபான்மையினர் என்று கூறக் கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு அதே நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத் தடை விதித்தது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் ஒரு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அதில், மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், உ.பி. மாநிலத்தில் முஸ்லீம்களை இனியும் சிறுபான்மையினர் என்று கூற முடியாது. எனவே உ.பி. முஸ்லீம் சமுதாயத்தினரை மதச் சிறுபான்மையினர் எனக் கருதக் கூடாது என்று ஸ்ரீவத்சவா தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந்தத் தீர்ப்பு உ.பியில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெரும் எதிர்ப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் இது தவறான தீர்ப்பு, இதை ஏற்க முடியாது என்று காட்டமாக கூறினார்.
காங்கிரஸ், சமாஜ்வாடி, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் உள்ளிட்டோர் இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக மட்டுமே இந்தத் தீர்ப்பை ஆதரித்தது.
இந்த நிலையில் உ.பி. மாநில அரசு, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆலம் மற்றும் கிருஷ்ணமுராரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
உ.பியில் பெரும் புயலைக் கிளப்பிய தீர்ப்புக்கு டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத் தடை விதித்துள்ளால் இப்போதைக்கு அங்கு பரபரப்பு குறைந்துள்ளது.