ஐஐடி மாணவர் சேர்க்கை நிறுத்தி வைப்பு
டெல்லி:பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை இந்த கல்வியாண்டிலேயே அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதால், ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், இடது சாரி தலைவர்கள் ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உச்சநீதிமன்ற தடையை நீக்கி வரும் கல்வியாண்டிலேயே இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு ஐஐடி, ஐஐஎம் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.