டி.எஸ்.பி. மனைவி தற்கொலை வழக்கு-சிவகாசி ஜெயலட்சுமி விடுதலை
திண்டுக்கல்:திண்டுக்கல் முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகரனின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கிலிருந்து சிவகாசி ஜெயலட்சுமியும், ராஜசேகரனும் விடுதலை செய்யப்பட்டனர்.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.பி. முதல் ஏட்டு வரை காவல்துறையினர் மீது சரமாரியாக புகார்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி. பின்னர் இவர் கூறிய புகார்களே பூமராங் மீது ஜெயலட்சுமி மீது திரும்பி அவர் மீது பல்வேறு மோசடிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
ஜெயலட்சுமி மீது நகை மோசடி, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல வழக்குகள் தொடரப்பட்டன. இதில் திண்டுக்கல் முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகரன் மனைவி விசாலாட்சியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கும் ஒன்று.
கடந்த 2000மாவது ஆண்டு ஜெயலட்சுமியை ராஜசேகரன் திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த அவரது மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ராஜசேகரன், ஜெயலட்சுமி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம், இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. மேலும் ஜெயலட்சுமிக்கு ரூ. 5000 அபராதமும், ராஜசேகரனுக்கு ரூ. 8000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இருவரும் தனித் தனியாக திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திரன் இன்று தீர்ப்பளித்தார்.
இருவர் மீதான குற்றச்சாட்டும் சரிவர நிரூபிக்கப்படவில்லை. எனவே இருவரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இருவரிடமும் வசூலிக்கப்பட்ட அபராதப் பணத்தை அவர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் ஜெயலட்சுமி நிரந்தரமாக விடுதலை ஆகியிருக்கும் முதல் வழக்கு இது.