வெடிமருந்து கிட்டங்கிகளில் அதிரடி சோதனை:ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்-2 பேர் கைது
கோவை:விழுப்புரம் வெடிவிபத்து சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வெடிமருந்து நிலையங்கள், கிட்டங்கிகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இதில் அனுமதி இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே ஜீப்பில் கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் வெடித்து 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெடிபொருள் கிட்டங்கிகள், நிலையங்களில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள், வெடிபொருள் விற்பனை மையங்கள், கிட்டங்கிகளில் சோதனை நடந்தது. இதில், சாலகப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு கிட்டங்கியில் அனுமதி இல்லாமல் 190 ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதேபோல 160 டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றைப் பதுக்கி வைத்திருந்த கல் குவாரி உரிமையாளர் சாமியப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதேபோல, ஈரோடு மாவட்டம் பவானி அருகே மாது தோட்டம் என்ற இடத்தில் வேலுச்சாமி என்பவர் கல் குவாரிகளுக்கு வெடிபொருட்களை விற்க உரிமம் பெற்றுள்ளார். இவரது வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அளவுக்கு அதிகமாக, உரிமம் பெறாமல் வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து 3120 வெடிபொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரை போலீஸார் கைது செய்தனர்.