வெடி விபத்து: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில்விசாரணைக் கமிஷன் - கருணாநிதி அறிவிப்பு
சென்னை:விழுப்புரம் அருகே நடந்த பயங்கர வெடிவிபத்து தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்தத் தீர்மானங்களைக் கொண்டு வந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி ஆகியோர் பேசினர்.
பின்னர் முதல்வர் கருணாநிதி இவற்றுக்குப் பதில் அளித்துப் பேசுகையில்,
விழுப்புரம் அருகே நடந்த பயங்கர வெடிவிபத்து எதிர்பாராத நிகழ்ச்சி. வெடிவிபத்தில் சிக்கிய வாகனத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் இல்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க, வெடிபொருள் விற்பனைக்கான உரிமம் வழங்கும் உரிமையை மாநில அரசுகளிடம் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம்.
இதை அரசியல் ஆக்கக் கூடாது என காங்கிரஸ், பாமக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதை அனைத்துக் கட்சிகளும் ஏற்க வேண்டும்.
இந்த சம்பவத்தையடுத்து எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்ககளை எடுக்க வசதியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்றார் கருணாநிதி.