இங்கிலாந்தை சுருட்டிய ஆஸ்திரேலியா
செயின்ட் பீட்டர்ஸ் (ஆண்டிகுவா)
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த முக்கியப் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.
செயின்ட் பீட்டர்ஸ் நகரில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதிய இப்போட்டி இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்த நிலையில் இப்போட்டியை இங்கிலாந்து சந்தித்தது.
முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. கேப்டன் மைக்கேல் வாகன் 5 ரன்களில் அவுட் ஆக ரன் குவிக்கும் பொறுப்பை இயான் பெல் ஏற்றார். சிறப்பாக ஆடிய அவர் 77 ரன்களைக் குவித்தார்.
ஸ்டிராஸ் 7 ரன்களில் வீழ அவருக்குப் பின்னர் வந்த கெவின் பீட்டர்சன் அதிரடியாக ஆடினார். மெக்கிராத் பந்துகளை அடித்து வெளுத்த அவர் அருமையாக ஆடி 104 ரன்களைக் குவித்தார். இது ஒரு நாள் போட்டியில் அவருக்கு முதல் சதமாகும்.
ஆனால் பின்னர் வந்த வீரர்கள் சொதப்பவே இங்கிலாந்தின் ரன் குவிப்பு மட்டுப்பட்டது. கடந்த போட்டியில் அபாரமாக ஆடிய ரவி போபாரா இந்தப் போட்டியில் 21 ரன்களை மட்டுமே எடுத்தார். இறுதியில், 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இங்கிலாந்து 247 ரன்களில் ஆட்டமிழந்தது.
பின்னர் ஆஸ்திரேலியா பேட் செய்தது. அதிரடி வீரர் கில்கிறைஸ்ட் 27 ரன்களும், மாத்யூ ஹைடன் 41 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரிக்கி பான்டிங் அபாரமாக ஆடி 86 ரன்களைச் சேர்த்தார். மைக்கேல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 55 ரன்களை எடுத்தார். அவருக்குத் துணையாக சைமண்ட் 28 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 47.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 248 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
இந்த வெற்றியின் மூலம் அரை இறுதிக்குள் ஆணித்தரமாக நுழைந்துள்ளது ஆஸ்திரேலியா.