பூவை விட தூசு பெட்டர்: அன்பழகன்
பொள்ளாச்சி: ஜெயலலிதாவின் தலையில் பூவாக இருப்பதை விட கருணாநிதியின் காலில் தூசியாக இருப்பதையே பெருமையாக நினைக்கிறேன் என்று நிதி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில், என்னை, கருணாநிதியின் காலடியில் கிடக்கும் தூசு என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அதில் எனக்கு சந்தோஷம்தான்.
ஜெயலலிதா தலையில் இருக்கும் பூவை விட கருணாநிதியின் காலடி தூசாக இருப்பதையே விரும்புகிறேன்.
பிறர்க்கு மரியாதை கொடுப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழன்தான். ஆனால் ஜெயலலிதாவுக்கு துளியும் மரியாதை தெரியாது. அதனால்தான் தமிழக அரசை பற்றி பாழ்படுத்த துடிக்கிறார்.
கருணாநிதி 5வது முறையாக முதல்வராகியுள்ளார். இந்தியாவில் யாரும் இந்த அளவுக்கு அதிக அளவில் முதல்வர் ஆனதில்லை. தான் போட்டியிட்ட 11 சட்டமன்ற தேர்தலிலும் அவர் வெற்றியடைந்துள்ளார்.
இப்படிப்பட்ட பெருமைக்குரிய கருணாநிதிக்கு விழா எடுக்க ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்றார் அன்பழகன்.