மருந்து கடைக்காரரின் கள்ள காதலிகள்: மீட்டுதருமாறு போலீஸாரிடம் மனைவி கதறல்
சென்னை:2 கள்ளக்காதலிகளுடன் வாழ்ந்து வரும் தனது கணவரை மீட்டு தன்னுடன் குடும்பம் நடத்துமாறு அறிவுறுத்த வேண்டும் எனக் கோரி மருந்துக் கடைக்காரரின் மனைவி சென்னை காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார்.
சென்னை கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் கலா. 34 வயதாகும் இவர் வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனக்கும், எனது கணவர் கணேஷ்குமாருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
மருந்துக் கடை நடத்தி வருகிறார் எனது கணவர். அவருக்கு இரண்டு பெண்களுடன் தொடர்பு உள்ளது. கவுசல்யா என்ற பெண்ணை எனக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அதுபோல தற்போது ரூபா என்ற இன்னொரு பெண்ணையும் வைத்துக் குடும்பம் நடத்துகிறார்.
இவர்களுடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பு காரணமாக என்னையும், குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து விட்டார். என்னை விவகாரத்து செய்யப் போவதாகவும் மிரட்டுகிறார். அத்தோடு இல்லாமல், கவுசல்யாவும் எனக்குப் போன் செய்து மிரட்டுகிறார்.
எனவே எனது கணவரை அவரது இரண்டு கள்ளக்காதலிகளிடமிருந்து மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கலா.