வி. சிறுத்தைகள் மாநாட்டில் கருணாநிதி பங்கேற்பு
சென்னை: திருநெல்வேலியில், ஜூன் மாதம் நடைபெற இருக்கும் விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற 14ம் தேதி அனைவருக்கும் வீடு, நிலம் மற்றும் அரசு சொத்துக்களின் குத்தகை பங்கீடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நெல்லையில் மண்ணுரிமை மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த மாநாடு ஜூன் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வார்.
சாதி ஒழிப்புக்காக பாடுபடும் தலித் அல்லாதவர்களில் சிறந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் அம்பேத்கார் சுடர் விருதும், ரூ. 50,000 பொற்கிளியும் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது பேராசிரியர் பிரபா கல்விமணிக்கு வழங்கப்படுகிறது. வரும் 14ம் தேதி சிறுத்தைகள் கொண்டாடும் சித்திரை திருவிழா நிகழ்ச்சியில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும்.
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பில் ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் 32 பொது தொகுதிகளாவும், 7 தனி தொகுதிகளாவும் அறிவிக்க வேண்டும். மேலும் தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும். தனி தொகுதிகளில் இதர சமூகத்தினர் போட்டியிட முடியாத நிலை இதன் மூலம் தவிர்க்கப்படும்.
தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் தமிழக மீனவர்களை காக்க மத்திய அரசு முயற்சி எடுக்கவில்லை. இதனால் மீனவர்களைப் பாதுகாக்க கோரி மீனவர் பாதுகாப்பு மாநாடு மே 1ம் தேதி சென்னையில் நடைபெறும்.
தலித் பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரம், பணியில் ஏற்படும் இடையூறுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் கூறினார்.