தமிழக எல்லையில் ஆந்திர நக்ஸல்கள் ஊடுருவல்
கிருஷ்ணகிரி:தமிழ்நாடு-ஆந்திர எல்லை மலையோரங்களில் நக்ஸலைட்டுகள் பதுங்கியுள்ளதாக போலீஸாருக்கு வந்த தகவலால் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி பர்கூரை அடுத்துள்ள ஆந்திர மாநில எல்லையாக உள்ள வரமலை குண்டா மலைப்பகுதி வழியாக நக்ஸலைட்டுகள் தமிழகத்திற்குள் நுழைந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து பர்கூர் டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் போலீஸ் தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நவீன ரக துப்பாக்கிகளுடன் இந்தப் படை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி தேன்மொழி கூறுகையில்,
தமிழக-ஆந்திர மாநில எல்லையோர பகுதி வழியாக நக்ஸலைட்டுகள் ஊடுறுவலை தவிர்க்க அதிரடி படையினர் ரோந்து வருவது வழக்கம். இதே போல் இப்போது வரமலைகுண்டா பகுதிகளிலும் தீவிர ரோந்து பணி நடத்தப்படுகிறது என்றார்.
வரமலைகுண்டா மலைப்பகுதியை சுற்றியுள்ள நிலமலை, போடி மலை, உங்கட்டுமலை, பொன்னந்தூர், சிங்காபுரம் போன்ற கிராமங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.