நாகை: நள்ளிரவில் தேர்தல் அதிகாரி கடத்தல்
நாகை:நாகையில் நகரசபை தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வந்த தேர்தல் அதிகாரி நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளார்.
நாகை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த தங்கப்பிள்ளை வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தல் செல்லாது, கவுன்சிலர்களது வாக்குகளை கமிஷ்னர் விஜயகுமாரே பதிவு செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மார்ச் 23ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட இருந்த நிைலயில் தங்கப்பிள்ளை தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது.தேர்தல் அதிகாரியாக நகராட்சி செயற்பொறியாளர் மாரியப்பன் அறிவிக்கப்பட்டார்.
இன்று இந்த தேர்தல் நடக்க இருந்தது. அனைத்து கவுன்சிலர்களும், அதிகாரிகளும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்துவிட்ட நிலையில் தேர்தல் அதிகாரியான மாரியப்பன் மட்டும் வரவில்லை.
இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது, லாட்ஜில் தங்கியிருந்த அவரை நேற்றிரவு சிலர் அழைத்து சென்றதாகவும், அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை எனவும் தெரியவந்தது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.