சின்னசேலத்தில் கள்ள துப்பாக்கி தயாரிப்பு-3 பேர் கைது
சின்னசேலம்: கள்ளத் துப்பாக்கி தயாரித்து விற்க வந்த 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் சின்னசேலத்தை சேர்ந்த சாமிதுரை(30)என்பவர், வெள்ளி(50), ராமசாமி(35) ஆகியோரின் உதவியுடன் லேத் பட்டறைகளில் துப்பாக்கி பாகங்களை தயாரித்து விற்பதாக கியூ பிராஞ்ச் போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதனை கண்டறிய கியூ பிராஞ்ச் போலீஸார், விவசாயிகள் போல் மாறு வேடமிட்டு அவர்களிடம் சென்றனர். தாங்கள் பாண்டிசேரியில் இருந்து வருவதாகவும், தங்கள் நிலத்தை பாதுகாக்கா துப்பாக்கி தேவைப்படுகிறது என அவர்களிடம் கூறி, ரூ. 1000 முன் பணமாக கொடுத்தனர்.
அதற்கு, தானே நேரில் துப்பாக்கி கொண்டு வந்து தருவதாக சாமிதுரை கூறினார்.
இதன்படி துப்பாக்கி தயாரித்து சின்னசேலம் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்தவர்களை, தயாராக காத்திருந்த கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ராஜ்பாபு தலைமையிலான படையினர் மடக்கி பிடித்தனர்.
இவர்களை பற்றி அவர்கள் கிராமத்தில் விசாரித்தபோது,
மலைவாழ் மக்களுக்கு தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களுடைய துப்பாக்கிகளை ரிப்பேர் செய்து கொடுத்துள்ளார். வெல்டிங் பட்டறை வைத்திருக்கும் வெள்ளி, ராமசாமி ஆகியோர் தனக்கு உதவியாக அமர்த்தி அவர்கள் மூலம் துப்பாக்கி பாகங்களை தனித்தனியே உருவாக்கி அவற்றை ஒன்றாக சேர்த்து துப்பாக்கி ரூ. 2,500 முதல் ரூ.10,000 வரை கோவை, சேலம் போன்ற பகுதிகளில் விற்று வந்துள்ளார்.
இவர் தீவிரவாத குழுக்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்தாரா, ஆயுத கடத்தல் கும்பலுடன் தொடர்பு உண்டா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.