ரூ.396 கோடியில் 15,869 வீடுகள்-ஸ்டாலின்
சென்னை:மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடிப்படை கல்வியும், வங்கிகளில் கடன் பெற வசதியாக அடையாள அட்டைகளும் வழங்கப்படும் என அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் இன்று பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்,
1989ல் திமுக அரசினால் தொடங்கப்பட்ட சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளை எளிதாக அணுக அடையாள அட்டைகள் வழங்கப்படும். இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடிப்படை கல்வி வழங்கப்படும். இந்த குழுக்கிடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும். இதற்கு ரூ.1 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி மறுவாழ்வு திட்டம் மூலம் ரூ.396 கோடியில் 15,869 வீடுகள் கட்டித் தரப்படும். இந்த வீடுகளுக்கு ரூ.40,000 செலவில் அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.
கைவினைஞர்கள் மேம்பாட்டிற்காக ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டு, கைவினைஞர் கிராமம் ஒன்றும், மாமல்லபுரத்தில் சிற்ப பூங்கா ஒன்றும் நிறுவப்பட உள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையிலுள்ள 3,820 காலி பணியிடங்கள் நிரப்பப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை மீது விதிக்கப்படும் அபராத வரி 12 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
கிராம ஊராட்சிகள் அமைப்புகளுக்கு யூனிட் மின்சாரம் ரூ.3.40 செலுத்துவது இனி ரூ.3 என குறைக்கப்பட்டுள்ளது.
2,534 கிராம ஊராட்சி ஒன்றியங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ. 507 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
ஊரக பகுதி இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் அமைத்து பராமரிப்பு செலவை அரசு ஏற்றுகொள்ளும்.
பழுந்தடைந்துள்ள ஊராட்சி சாலைகளை ரூ.103 கோடியே 60 லட்சம் செலவில் சீரமைக்கப்படும்.