3 லாரிகள் மோதல்- பாறை மீது மோதி தீப்பிடித்து 7 பேர் பலி
தர்மபுரி:பாறையின் மீது மினி லாரி மோதி தீப்பிடித்துக் கொண்டதில் அதிலிருந்த 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஆந்திராவிலிருந்து கடப்பா கல் ஏற்றி கொண்டு சேலம் தொப்பூர் வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. கணவாய்ப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது இந்த லாரியின் பாரம் ஒரு பக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது.
இதன் பின்னால் தென்னை நார்களை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. கடப்பா கல் லாரி திடீரென கவிழ்ந்ததால், அதன் மோதமல் இருக்க லாரியை வலப் பக்கமாக திருப்பினார் தென்னை நார் ஏற்றி வந்த லாரி டிரைவர்.
இதனால் அந்த லாரி கட்டுபாட்டை இழந்து சாலையின் மத்திய தடுப்பை உடைத்துக் கொண்டு எதிரே பூக்களை ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதனால் பூ ஏற்றி வந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி பாறையின் மீது மோதியது. உடனே தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. அந்த லாரியில் இருந்த 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
ஒரே நேரத்தில் நடந்த 3 லாரிகளின் விபத்தினால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தொடர் விபத்தில் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.