வெடி விபத்து-கருணாநிதி ஏன் வரவில்லை: விஜயகாந்த் கேள்வி
விழுப்புரம்:பாராட்டு விழாவிற்கு மட்டும் செல்லும் முதல்வர் திண்டிவனம் செண்டூர் வெடிவிபத்தை பார்வையிட ஏன் வரவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
செண்டூரில் காரில் ஜெலாட்டின் குச்சிகள் வெடித்ததில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கி பேசிய அவர்,
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25,000 மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 5,000 வழங்கியுள்ளேன்.
ஜெலட்டின் குச்சி வெடித்ததால் மட்டுமே இந்த அளவு பாதிப்பு ஏற்படாது. ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் இருந்திருக்கலாம். இதில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் யார் யார் என கண்டறியப்பட வேண்டும். அதற்கு முதல்வர் உத்தரவிடவேண்டும்.
இவர்களுக்கு வழங்கிய ரூ.1 லட்சம் நிதியுதவி போதாது. கன்னியாகுமரி மீனவர்களுக்கு வழங்கியது ரூ.5 லட்சமும், அரசு வேலையும் வழங்கவேண்டும். போர்கால அடிப்படையில் வீடுகள் கட்டி தரவேண்டும்.இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆளும் கட்சியாக இருந்தால் முழு பாதிப்பு எனவும், மற்றவர்களுக்கு குறைந்த பாதிப்பு எனவும் கணக்கெடுப்பதாக மக்கள் குறை கூறுகின்றனர்.அரசு எல்லோருக்கும் பொதுவாக கணக்கெடுக்க வேண்டும்.
விபத்து நடந்த இடத்திற்கு இதுவரை முதல்வர் நேரில் வந்து பார்வையிடாமல் இருப்பது ஏன், பாராட்டுவிழா என்றழைத்தால் மட்டும் பங்கேற்றும் அவர் இந்த இடத்திற்கு வராதது ஏன். மதுரையில் நடந்த தன் மகனின் பிறந்த நாளுக்கு சென்று ஒரு வாரம் தங்கிவிட்டு வந்தவர், இங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவறிவிட்டார் என்றார் விஜய்காந்த்.