யாருடைய பீதிக்கும் இந்த அரசு பணியாது-கருணாநிதி
சென்னை:எங்கே யார் பீதியை கிளப்பினாலும் இந்த அரசு பணியாது என முதல்வர் கருணாநிதி கூறினார்
சட்டசபையில் இன்று பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன், பண்ருட்டியில் முந்திரி காட்டில் லட்சுமி என்ற பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாகவும், முதல்வர் கவனத்திற்கு கொண்டு வந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்திரவிடவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,
இந்த பிரச்சனையை வேல்முருகன் அவையில் சொன்னபிறகு எனக்கு தெரியும். இதுகுறித்து ஆட்சியாளர், போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் குறித்து விசாரிக்கப்படும். மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அங்கு மக்கள் பீதியோடு இருப்பதாக கூறினார். எங்கே யார் பீதியை கிளப்பினாலும் அரசு பணியாது. பொதுமக்களும் பீதி அடைய தேவையில்லை. பாதுகாப்பான அரசில் வாழ்கிறோம் என்ற நம்பிக்கையில் இருங்கள் என்றார்.
பின்னர் சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு புதியதாக கட்டிடம் கட்டும் திட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,
9 மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்ட அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கு ரூ.23 கோடி பரிந்துரை செய்யப்பட்டிருந்ததில், ரூ.20 கோடி அனுமதிக்கலாம் என நிதித்துறை பரிந்துரை செய்து, பிப்ரவரி மாதம் கையெழுத்திட்டு பணிகள் ஆரம்பாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 1,432 காவல் நிலையங்கள் உள்ளன. மகளிர் காவல்நிலையங்கள் 196 உள்ளன என்றார் கருணாநிதி.