தெலுங்கு தேச மண்டல தலைவர் கொலை?:ஆந்திர- தமிழக எல்லையில் பதற்றம்
திருப்பதி:தெலுங்கு தேசம் கட்சியின் மண்டலத் தலைவர் கடத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவதையடுத்து அவரது ஆதரவாளர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வேலூர், திருத்தணியிலிருந்து சித்தூர் செல்லும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் குடிபாலா மண்டல தலைவரான மெட்ராஸ் பாபு என்ற விஜயகுமார் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் திரும்பி வரவில்லை.
இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு பின் பகுதியிலுள்ள வனப்பகுதியில் அவருடைய தங்க செயின் கிடந்தது.
அருகிலிருந்த பாறையில் ரத்த கறை படிந்திருந்தது. அதன் பக்கத்தில் சில உருட்டுகட்டைகளும் இருந்தன.
இதனால் பாபுவை யாராவது கடத்திக் கொன்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து குடிபாலா போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸாரும், கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன.
இரவு முழுவதும் வனப்பகுதியில் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
பேருந்து மற்றும் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் தமிழக ஆந்திர எல்லைப்பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவுகிறது. வேலூர், திருத்தணியிலிருந்து சித்தூர் செல்லும் பேருந்து போக்குவரத்து பாதித்துள்ளது.