நாணயத்தில் கிராஸ்- ஆர்எஸ்எஸ் பாய்ச்சல்
டெல்லி:புதிய இரண்டு ரூபாய் நாணயத்தில் கிறிஸ்துவ மதத்தை வளர்க்கும் விதமாக சிலுவை சின்னம் போடப்பட்டுள்ளதாகவும், இந்த நாணயத்தை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டுள்ள ரூ.2 நாணயத்தின் ஒரு பக்கத்தில் கூட்டல் அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி, இது ஒற்றுமையின் சின்னம் என விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள், விஎச்பி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள், இது கிறிஸ்துவர்களின் சிலுவை சின்னம் என்கின்றன.
மேலும் இதை திரும்பப் பெறவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்ஷன் கூறுகையில்,
இந்த நாணயத்தில் சிலுவை பொறிக்க சொன்னது யார், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என நாட்டு மக்களுக்கு ரிசர்வ் வங்கி தெரிவிக்க வேண்டும்.
கிறிஸ்துவத்தை வளர்ப்பதற்காக தான் இந்த சின்னத்தை பொறித்ததாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது. எனவே இந்த ரூ.2 நாணயத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.
ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் ராம்மாதவ் கூறுகையில்,
மத சின்னங்களை நாணயத்தில் பொறிக்கப்படுவதால் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும். இதே போன்று அனைத்து மதத்தினரும் தங்கள் மதசின்னத்தை நாணயத்தை வெளியடும்படி போராட்டம் நடத்துவார்கள்.
ரோம் நகர பேரரசர் லூயிஸ் வெளியிட்ட நாணயத்தில் இதே போல் சிலுவை அடையாளமும் 4 புள்ளிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த 4 புள்ளிகள் பைபிளில் உள்ள 4 அதிகாரங்களை குறிப்பதாகும்.
எனவே இந்த நாணயங்களை திரும்ப பெறவேண்டும் என்றார்.