அம்பேத்கார் படம் திறப்பு-காங்கிரஸார் அடிதடி:சத்தியமூர்த்தி பவனில் ரணகளம்
சென்னை:அம்பேத்கார் பிறந்த நாள் விழாவில் அவருடைய படத்தை திறந்து வைப்பது என்பதில் காங்கிரஸார் அடிதடியில் ஈடுபட்டனர். இதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது.
சென்னை காங்கிரஸார் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், அம்பேத்காரின் 117வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாப்படும் என தமிழக காங்கிரஸ் அறிவித்தது.
இதையொட்டி அம்பேத்கார் உருவப் படத்தை, ஆதிதிராவிடர் பிரிவின் முன்னாள் தலைவர் பிராங்கிளின் பிரகாஷ் திறப்பார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பிராங்கிளினுக்கு எதிர் அணியாக செயல்படும் எம்எல்ஏ ஜெயகுமாரின் ஆதரவாளரான சென்னை மாநகராட்சி கவுன்சிலர் செல்லப்பா என்பவர் தனது தலைமையில் தான் விழா நடக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியிடம் கூறினார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதன்படி இருதரப்பினரும் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தனர். காலை மத்திய அமைச்சர் இளங்கோவன், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், எம்எல்ஏக்கள் அன்பரசு,அசேன் அலி மற்றும் அகில இந்திய ஜவுளித்துறை வாரியத்தின் உறுப்பினர் ரங்கபாஷ்யம் ஆகியோர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.
அப்போது செல்லப்பாவின் ஆதரவாளர்கள் பட்டா கத்தியுடன் வந்து, பிராங்களின் தலைமைல் எப்படி விழா நடத்தலாம் என பிரச்சனை எழுப்பினர். அங்கிருந்து சுதர்சனம் அறைக்கு சென்று அங்கிருந்த மேஜை, நாற்காலி, பேனர் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர்.
எம்எல்ஏக்கள் 3 பேரையும் தாக்கினர். இதனால் அவர்களை அறையில் வைத்து பூட்டினார் சுதர்சனம். இதையறிந்த கிருஷ்ணசாமி விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து வைத்தார்.
போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர்.
இக் கும்பலின் தாக்குதலில் ஆலிஸ் மனோகரி என்ற காங்கிரஸ் பிரமுகரும் காயமடைந்தார். அவர் கூறுகையில்,
எனக்கும் ஆதிதிராவிட பிரிவினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும் எனக்கே கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு இல்லை. தாக்குதல் நடத்தியவர்கள் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.