ஜெவுக்கு அக்கறையில்லை-கருணாநிதி தாக்கு
சென்னை:காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் முடிவு குறித்து கர்நாடக அரசுக்கு தெரிந்தது ஜெயலலிதாவுக்கு தெரியவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் எதைப்பற்றி பேசி விவாதித்து முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பது குறித்து விவரம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் இக்கூட்டத்தை விமர்ச்சித்து ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழக அரசு நடுவர் மன்றத்திடமே விளக்கம் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்து மனுத்தாக்கல் செய்ய இருப்பதாக கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் போது, ஏன் தமிழக அரசு அணுக கூடாது என்ற கேள்விக்கு கருணாநிதியிடம் பதில் இல்லை என கூறியுள்ளார்.
கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா அம் மாநில சட்டசபையில் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தபின் வழக்கு தொடரவும், இறுதி தீர்ப்பில் சில விளக்கங்கள் கேட்டு நடுவர் மன்றத்திலும் ஒரு மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதித் தீர்ப்பில் முரண்பாடு இருப்பதாக மாநில அரசுகள் கருதினால் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசும் இந்த தீர்ப்பை எதிர்த்து சில விளக்கங்கள் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுத்திடும் நிலை குறித்து கர்நாடக அரசு தெரிந்து வைத்திருக்கும் விவரத்தை கூட ஜெயலலிதா அறிந்திருக்கவில்லை என்றால் அவருக்கு காவிரி பிரச்சனையில் அவ்வளவு அக்கறை இல்லை என்பது தவிர வேறு என்ன?.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.