எஸ்.பி.பிரேம்குமார் திடீர் டிஸ்மிஸ்
சென்னை:சங்கராச்சாரியாரை கைது செய்து பெரும் பரபரப்புக்குள்ளான எஸ்.பி. பிரேமகுமார் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
21 ஆண்டுகளுக்கு முன் ராணுவ வீரர் நல்லகாமன் என்பவரையும் அவரது மகனையும் தாக்கி ரோட்டில் கைவிலங்கு போட்டு இழுத்துச் சென்றது, ராணுவ வீரரின் மனைவியை தாக்கியது மற்றும் பெண் ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து தாக்கியது ஆகிய வழக்குகளில் சமீபத்தில் பிரேமகுமாருக்கு எதிராக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
21 ஆண்டுகளாக இந்த வழக்கை இழுத்தடித்து வந்த பிரேம்குமாரை நீதிமன்றத்தில் சரணடையவும், அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக ஜெயேந்திரருக்கு எதிரான வழக்கில் அப்ரூவரான ரவிசுப்பிரமணியத்தை, திமுக ஆட்சிக்கு வந்த பின் நேரில் சந்தித்த பிரேம்குமார், அவரை தப்பிச் செல்லுமாறு கூறி சிக்கலில் மாட்டினார். அந்த விவகாரத்தில் பிரேம்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
இப்போது நல்லகாமன் வழக்கிலும் உச்ச நீதிமன்றத்திடம் கண்டனம் பெற்றுள்ளார் பிரேம். இதையடுத்து அவரை பதவியில் இருந்தே டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
அரசு ஊழியர் நன்னடத்தைப் பிரிவு 3 (11)ன் கீழ் பிரேம்குமார் மீது இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.
இந்தப் பிரிவின்படி எந்த விளக்கமும் கேட்காமலேயே பதவி நீக்கம் செய்ய முடியும். தேச துரோக செயல்களுக்குத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போது பிரேம் குமார் மீது இந்தப் பிரிவில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.