சென்னையில் ஐசிஎப் ஊழியர் மீது துப்பாக்கி சூடு
சென்னை:சென்னையில் ஐஎப்சி ஊழியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.
சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் பிட்டராக வேலை பார்த்து வருபவர் அகமது பாட்ஷா(34). இவர் பெரம்பூர் மூர்த்தி நகரில் வசித்து வருகிறார்.
நேற்றிரவு இவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள் இவரை பின் தொடர்ந்தனர். அதில் ஒருவன் தீடீரென துப்பாக்கியால் பாட்ஷாவை நோக்கி சரமாரியாக சுட்டான்.
அகமதுவின் இடுப்பு பகுதியில் குண்டு துளைத்து, அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயக்கமானார். அருகில் இருந்தவர்கள் அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து இணை கமிஷ்னர் ரவி, துணை கமிஷ்னர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
தன்னை சுட்டவர்கள் யார் என்பது தெரியாது, எதற்காக சுட்டார்கள் என்பதும் தெரியாது என பாட்ஷா போலீசாரிம் கூறியுள்ளார்.
சென்னையில் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.