வேன் மீது ரயில் மோதி பயங்கரம்: 13 வி.ஏ.ஓ.க்கள் பரிதாப பலி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே ஆளில்லா ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற வேன் மீது ரயில் பயங்கரமாக மோதியதில் 13 கிராம நிர்வாக அலுவலர்கள் பரிதாபமாக இறந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை செங்கல்பட்டிலிருந்து அரக்கோணத்திற்கு மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில் வந்தபோது ஆளில்லா ரயில் கிராசிங்கை ஒரு வேன் கடக்க முயன்றதை ரயில் டிரைவர் பார்த்துள்ளார்.
ரயிலை நிறுத்த முடியாத வேகத்தில் அது வந்து கொண்டிருந்ததால் பலமாக ஹாரன் எழுப்பி, வேன் டிரைவரை ரயில் டிரைவர் எச்சரித்துள்ளார். ஆனால் அதையும் மீறி அந்த வேன் வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தண்டவாளத்தின் நடுவே வேன் சிக்கிக் கொண்டது. இதனால் வேகமாக வந்த ரயில் வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிபாதமாக இறந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த இடம் முழுவதும் ரத்தமும், சதையுமாக படு கோரமாக காணப்படுகிறது. வேனில் பயணம் செய்த 35 பேரும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவர். அனைவரும் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள குரு பகவான் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு காஞ்சிபுரம், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்து தாறுமாறாக கிடந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்ப உதவினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் இதே இடத்திற்கு அருகே உள்ள புதுப்பாக்கம் என்ற பகுதியில், ஆளில்லா ரயில் கிராசிங்கைக் கடக்க முயன்ற ஷேர் ஆட்டோ மீது ரயில் மோதி 15 பேர் பரிதாபமாக பலியாயினர் என்பது நினைவிருக்கலாம்.
அந்த சம்பவத்திற்குப் பிறகும் அந்த இடத்தில் இன்னும் ரயில்வே கேட் அமைக்கப்படவில்லை என்பது வேதனையான செய்தி. இப்போது அதேபோன்ற ஒரு விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.