குணமடைந்தார் தனுஷ்கோடி ஆதித்தன்:கட்சிப் பணிகளுக்குத் திரும்புகிறார்
திருநெல்வேலி:சாலை விபத்தில் படுகாயமடைந்து வலது கரத்தை இழந்த முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் முழுமையாக குணமடைந்து நெல்லைக்குத் திரும்பினார். மீண்டும் முழு வீச்சில் கட்சிப் பணிகளில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடி காரில் தனது மனைவி, மகள் ஆகியோருடன் போய்க் கொண்டிருந்த தனுஷ்கோடி ஆதித்தன் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் படுகாயமடைந்தார். அவரது மனைவி இந்திரா தேவி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தனுஷ்கோடி ஆதித்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் சேதமடைந்த தனுஷ்கோடியின் வலது கரம் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு விட்டது.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த தனுஷ்கோடி ஆதித்தன் முழு குணமடைந்து நெல்லை திரும்பினார். அங்கு ரயில் நிலையத்தில் அவருக்கு காங்கிரஸார் பெருமளவில் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தனுஷ்கோடி ஆதித்தன் பேசுகையில், 9 மாதங்களுக்குப் பிறகு மறு பிறவி எடுத்து வந்துள்ளேன். எனக்காக பிரார்த்திர்த்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
நெல்லை மக்களுக்கு நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. எனது வலது கரம் போய் விட்டாலும் மக்கள் எனக்கு வலது கரமாக இருந்து ஆதரவு தருவார்கள்.
விரைவில் டெல்லி சென்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் கலந்து கொள்வேன். வருகிற 23ம் தேதி காமராஜர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்புகிறேன் என்றார் தனுஷ்கோடி ஆதித்தன்.