தமிழக பஸ் மீது ஆந்திராவில் கல்வீச்சு:காயத்துடன் ஓட்டி வந்த டிரைவர்
சித்தூர்:தெலுங்கு தேச தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தமிழக எல்லை அருகே உள்ள சித்தூர் மாவட்டத்தில் வன்முறை மூண்டு, தமிழக அரசுப் பேருந்து மீது பயங்கர தாக்குதல் நடந்தது. இதில் படுகாயமடைந்த டிரைவர், உயிரையும் பொருட்படுத்தாமல் பயணிகளை பத்திரமாக விழுப்புரத்துக்கு அழைத்து வந்தார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட தெலுங்கு தேச மண்டலக் குழுத் தலைவர் இருந்தவர் மெட்ராஸ் பாபு என்கிற விஜயக்குமார். இவரை சிலர் வெட்டிப் படுகொலை செய்து விட்டனர். இதனால் சித்தூர் மாவட்டத்தில், வன்முறை மூண்டது. கடைகள் அடைக்கபப்ட்டன. சாலைகள் வெறிச்சோடின.
அப்போது திருப்பதியிலிருந்து விழுப்புரம் திரும்பிக் கொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்து பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. கருணாகரன் என்கிற டிரைவர் வண்டியை ஓட்டி வந்தார்.
நரஹரிப்பேட்டை பகுதியில் அந்தப் பேருந்தின் மீது வன்முறைக் கும்பல், சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. இத் தாக்குதலில் பேருந்தின் இரு பக்க கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கின. கருணாகரனின் கையில் கண்ணாடித் துண்டுகள் பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் வேகமாக பேருந்தை ஓட்டிய அவர், வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள காவல் நிலையத்தில் விஷயத்தைக் கூறிய அவர் வேலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தார்.
அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் அதிகாரிகள் யாரும் இல்லை. இதனால் மாற்று டிரைவரை அனுப்புமாறு தகவல் கொடுத்தார். ஆனால் மாற்று டிரைவர் யாரும் வருவதாகத் தெரியவில்லை. காத்திருந்த பார்த்த அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
பின்னர் கையில் கட்டுடன் பேருந்தை எடுத்த அவர் நிதானமாக விழுப்புரத்திற்கு வந்து சேர்ந்தார். தனது உயிரையும், காயத்தையும் பொருட்படுத்தாமல் பயணிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட கருணாகரனை பயணிகள் அனைவரும் மனதாரப் பாராட்டினர்.