காங். எம்எல்ஏ மீது பெண் பிரமுகர் போலீஸில் புகார்
சென்னை:காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜெயக்குமாரின் தூண்டுதலின் பேரில், அவர் கூட்டி வந்த ரவுடிக் கும்பல் என்னை சேலையைப் பிடித்து இழுத்தும், கன்னத்தில் அடித்தும் மானபங்கப்படுத்தியதாக, கோஷ்டி மோதலில் சிக்கி அடிபட்ட மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும், மகளிர் ஆணைய உறுப்பினருமான ஆலிஸ் மனோகரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
கடந்த 14ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த அம்பேதகர் பிறந்த நாள் விழாவில் கோஷ்டி மோதல் வெடித்தது. மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கண் முன்பு நடந்த இந்த மோதலில், ஆலிஸ் மனோகரிக்கு அடி விழுந்தது. அவரது சேலை கிழிக்கப்பட்டது.
இந்த நிலையில், எம்எல்ஏ ஜெயக்குமார் தூண்டுதலின்பேரில்தான் தான் தாக்கப்பபட்டு அவமானப்படுத்தப்பட்டதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார் மனோகரி.
இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனோகரி கொடுத்துள்ள புகார் மனுவில், சம்பவத்தன்று நான் பொருளாளர் சுதர்சனம் அறை முன்பு நின்று கொண்டிருந்தேன். அப்போது பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 20 பேர் கொண்ட கும்பல், 31வது வார்டு கவுன்சிலர் செங்கை செல்லப்பா தலைமையில் வந்தது.
அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். என்னையும் தேவையில்லாமல் தாக்கினர். கன்னத்தில் மாறி மாறி அறைந்தனர். சேலையப் பிடித்து இழுத்தனர். செங்கை செல்லப்பா என்னை நோக்கி ஆபாசமாக திட்டியவாறு ஓடி வந்து குத்த முயன்றார்.
அப்போது அருகில் இருந்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, யசோதா, சுதர்சனம் ஆகியோர் மீட்டு அறை ஒன்றிற்குள் என்னை வைத்துப் பூட்டிக் காப்பாற்றினர்.
என்னைத் தாக்கியவர்கள் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதால் அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன்.
ஜெயக்குமார் தான் இத்தனைக்கும் காரணம். எனவே அவர் உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஆலிஸ்.