வங்கதேசத்தை வீழ்த்தியது அயர்லாந்து
பிரிட்ஜ்டவுன்:சூப்பர் 8 உலகக் கோப்பைப் போட்டியில், வங்கேதசத்தை 74 ரன்களில் அயர்லாந்து வீழ்த்தியது.
முதல் முறையாக சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ள அயர்லாந்தும், வங்கதேசமும் நேற்று பார்படாஸில் நடந்த போட்டியில் மோதின. வங்கதேசம் இந்தப் போட்டியில் வெற்றி பெறக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயம், அயர்லாந்தையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்பதால் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. வங்கதேச பந்து வீச்சை சமாளித்து அயர்லாந்து வீரர்கள் வேகமாக ரன் குவிக்க ஆரம்பித்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் வில்லியம் போர்ட்டர்பீல்டு சிறப்பாக ஆடி 85 ரன்களைக் குவித்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெரீமி பிரே 31 ரன் எடுத்தார்.
கெவின் ஓ பிரையன் 48, கேப்டன் ஜான்ஸ்டன் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு வலுவூட்டினர். இருதியில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 243 ரன்களைச் சேர்த்தது அயர்லாந்து.
பின்னர் ஆடிய வங்கேதசம், தொடக்க வீரர்களை விரைவாக இழந்தது. தமீம் இக்பால் மட்டும் 29 ரன்களை எடுத்தார். நபீஸ், அப்தாப் அகமது, சகீபுல் ஹசன் ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
கேப்டன் பாஷர் 32 ரன்களும், முகம்மது அஷ்ரபுல் 35 ரன்களும் சேர்த்தனர். அயர்லாந்து பந்து வீச்சை சமாளிக்கத் திணறிய வங்கதேசம், 41.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 169 ரன்களில் சுருண்டது.
இந்த வெற்றி அயர்லாந்துக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த வெற்றி குறித்து அயர்லாந்து கேப்டன் ஜான்ஸ்டன் கூறுகையில், ஆஸ்திரேலியாவுடனான போட்டியைத் தவிர மற்ற போட்டிகளில் நாங்கள் நன்றாகவே ஆடினோம். இன்றைய வெற்றி எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது என்றார்.
இந்த இரு அணிகளும் சூப்பர் எட்டு சுற்றில் தலா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.