பெண் அதிகாரிகளின் அந்தரங்க தகவல்கள்:இனி அவசியம் இல்லை - மத்திய அரசு
டெல்லி:மாதவிடாய் உள்ளிட்ட அந்தரங்கத் தகவல்களை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய பணியாளர் துறை மார்ச் 14ம் தேதி ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. அதன்படி, பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வருடாந்திர பணி அறிக்கையில், தாங்கள் கடைசியாக கர்ப்பம் தரித்தது எப்போது, கடைசியாக மாதவிடாய் வந்தது எப்போது, மார்பகப் புற்றுநோய் உள்ளதா, இல்லையா என்பது உள்ளிட்ட அந்தரங்கத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பெண் அதிகாரிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாதவிடாய் என்பது பெண்களின் தனிப்பட்ட விஷயம், இயற்கையான ஒரு நிகழ்வு. இதை கேட்பது பெண்களை இழிவுபடுத்தும் செயல், அந்தரங்கத்தில் தலையிடும் அநாகரீகச் செயல் என கண்டனங்கள் எழுந்தன.
மத்திய மகளிர் நலத்துறை அமைச்சர் ரேணுகா செளத்ரியும், இந்த உத்தரவு தேவையில்லாதது, தவறானது, இதை திரும்பப் பெற வேண்டும் என கோரியிருந்தார். அதேபோல தேசிய மகளிர் ஆணையத் தலைவி கிரிஜா வியாஸும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அரசின் இந்த உத்தரவுக்கு மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சில பெண் அதிகாரிகள் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்தே தனது உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது மத்திய அரசு.