நெல்லை-வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்
நெல்லை:திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலுக்கு சுற்றுலா வந்த பயணிகள் திடீரென ஆற்று வெள்ளத்தில் சிக்கியனர். அவர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செய்யது காசின் மற்றும் அக்பர் பாஷா. இவர்கள் கோடை விடுமுறையை கொண்டாட தங்களது குடும்பத்தினருடன் நெல்லை அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர்.
இரண்டு வேன்கள் மூலம் நெல்லை அருகே உள்ள திருக்குறுங்குடி மலைநம்பி கோயில் மலைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் அவர்கள் சிக்கிக்கொண்டு கரை வரமுடியாமல் தவித்தனர். இதை பார்த்த அப்பகுதியினர் திருக்குறுங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர்.