1500 அடி பள்ளத்தில் 4 நாள் உயிர் போராட்டம்
கொடைக்கானல்:கொடைக்கானல் மலையில் 1500 பள்ளத்தில் விழுந்த வாலிபர் 4 நாட்ளாக வெறும் ஊற்றுத் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து பத்திரமாக மீண்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 11ம் தேதி தற்கொலைப் பாறை அருகே உள்ள கால்ப் கிளப்புக்கு வேலைக்காக சென்றார். அப்போது கால் தடுமாறி மலைப் பள்ளத்தில் விழுந்தார்.
அவர் விழுந்த மலைப் பகுதி 1500 அடி ஆழமுடைய பள்ளமாகும். புன்னகை மன்னன் படத்தில் தற்கொலைக்கு முயன்று மரக் கிளையில் சிக்கி உயிர் தப்பிய கமல்ஹாசனைப் போல ஒரு மரக்கிளையில் சிக்கித் தப்பித்தார் ஆரோக்கியதாஸ்.
2 நாட்களாக இப்படி மரக் கிளையில் தொக்கியபடி இருந்துள்ளார் ஆரோக்கியதாஸ். பின்னர் மயக்கமடைந்து, கீழே விழுந்தார். காப்பாற்றுமாறு கோரி உரக்கக் குரல் எழுப்பினார். ஆனால் யாருக்கும் அந்த குரல் எட்டவில்லை. இப்படியாக கடந்த நான்கு நாட்களாக பள்ளத்தில் பரிதவித்தபடி இருந்தார் ஆரோக்கிய தாஸ்.
இந்த நான்கு நாட்களும் அவர் மலைப் பள்ளத்தில் வந்த ஊற்று நீரைக் குடித்து உயிரைக் கையில் பிடித்துக் கிடந்தார். இந்த சமயத்தில் அப்பகுதி வழியாக ஒருவர் வந்துள்ளார். அரை மயக்கமாக கிடந்த ஆரோக்கிய தாஸைப் பார்த்த அவர் சத்தம் போட்டு ஆட்களைக் கூப்பிட்டுள்ளார்.
பின்னர் தீயணைப்பு படையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்து ஆரோக்கிய தாஸை மீட்டனர். பின்னர் மருத்துவமனையில் முதலுதவி கொடுத்த பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆரோக்கியதாஸ் அனுப்பி வைக்கப்பட்டார்.