பிறமலைக் கள்ளர்-மூமுக போராட்டம்: ஜெ ஆதரவு
சென்னை:ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட பிறமலைக் கள்ளர் குடும்பத்தினருக்கு உதவித் தொகை தரக் கோரி மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுகவும் கலந்து கொள்ளும் என அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
1920ம் ஆண்டு கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி ஆங்கிலேய காவல் துறையினரால் 17 பிறமலைக் கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு தியாகிகள் உதவித் தொகை தரவேண்டும் என்றும், இத்துயர சம்பவம் நடைபெற்ற பெருங்காமநல்லூர் என்ற இடத்தை வரலாற்று சிறப்பு மிக்க இடமாக மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வேகு நாட்களாக இருந்து வருகிறது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக தோழமைக் கட்சியான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் மதுரையில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதற்கு அதிமுக முழு ஆதரவு கொடுக்கும், மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக சார்பில் துரை.கோவிந்தராஜன், ஆர்பி. உதயகுமார், தங்க தமிழ்செல்வன் எம்பி, ராஜன் செல்லப்பா, ஜெயராமன், துரைராஜ், போஸ் எம்எல்ஏ, மகேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.