ரயில் விபத்து: பலியானோர் குடும்பங்களுக்குநிதியுதவி-வாரிசுகளுக்கு அரசு வேலை
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில், வேன் மீது ரயில் மோதியதில் இறந்த 11 பேரின் குடும்பங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளன. இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகம் தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இறந்தவர்களில் 9 பேர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பதால் அவர்களுக்கு இறந்த பின்னர் கிடைக்கும் குடும்ப நல நிதியாக ரூ. 1 லட்சம் வழங்கப்படும். எனவே கிராம நிர்வாக அலுவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2.50 லட்சம் இழப்பீடும், மற்ற இருவரது குடும்பங்களுக்கு தலா ரூ. 1.50 லட்சமும் இழப்பீடாக கிடைக்கும்.
இதற்கிடையே, விபத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.