கூவாகம் விழா நாளை தொடக்கம்
விழுப்புரம்:அரவாணிகளின் ஒரே கோவிலான விழுப்புரம் மாவட்டம் கூவாகம், கூத்தாண்டவர் கோவில் சித்திரை விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மகாபாரதப் போரின்போது அரவாண் களப்பலி கொடுக்கப்பட்டான். அவனை மோகினி அவதாரம் எடுத்து மணந்த கிருஷ்ணர், அரவாண் களப்பலி கொடுக்கப்பட்ட பின்னர் வெள்ளைச் சேலை அணிந்து விதவைக் கோலம் பூண்டார்.
இதை அடிப்படையாக வைத்து கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விழா கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி மே 1ம் தேதி நடக்கிறது. 2ம் தேதி தேரோட்டம் நடைபெறும். 3ம் தேதி தாலி அறுப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
திருவிழாவையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான அரவாணிகள் கூவாகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவையொட்டி எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அழகிப் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.