அமெரிக்க துப்பாக்கி சூடு-தமிழக பேராசிரியரும் பலி
பிளாக்ஸ்பர்க்:அமெரிக்காவின் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான பொறியியல் பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் (53) தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
விர்ஜீனியா டெக் பல்கலைகக்கழகத்தின் சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் லோகநாதன்.லோகநாதனுக்கு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம்தான் சொந்த ஊராகும். பலியான லோகநாதனுக்கு உஷா (46) என்ற மனைவியும், உமா (21), அபிராமி (12) ஆகிய மகள்களும் உள்ளனர். இவர்களுடன் லோகநாதன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.
திருச்சி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் பி.இ. படித்த லோகநாதன், பின்னர் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.டெக் படித்தார். அதன் பின்னர் கான்பூர் ஐஐடியில் மேல் படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு பிஎச்டி பட்டம் பெற்றார்.
லோகநாதனின் அண்ணன் பழனிவேல் தமிழக மின்வாரிய அதிகாரியாக உள்ளார். இவரது தம்பி செங்காட்டு வேலு ஆடிட்டர் ஆவார். லோகநாதனின் மறைவையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் அமெரிக்கா விரைந்துள்ளனர்.
லோகநாதனின் அகால மரணத்தால் கரட்டடிபாளையம் கிராமம் முழுவதும் சோகம் சூழ்ந்துள்ளது. லோகநாதனின் வயதான தாயார் கண்ணம்மாள் மற்றும் உறவினர்கள் கதறியழுதவண்ணம் உள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு, சிறந்த ஆசிரியருக்கான, டபிள்யு.இ.வைன் விருதினையும் அவர் பெற்றுள்ளார்.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விர்ஜீனீயா டெக் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு, அங்கு படித்து வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் நிலை குறித்த தகவல்களை அறிய கீழ்க்காணும் இ-மெயில் முகவரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.
[email protected]
[email protected]
[email protected]