மும்பை ஸ்டார் டிவி அலுவலகம் சூறை!
மும்பை:சூரத்தைச் சேர்ந்த காதல் ஜோடி குறித்த செய்தியை வெளியிட்டதற்காக இந்து ராஷ்டிர சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மும்பையில் உள்ள ஸ்டார் டிவி அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடினர். அலுவலக ஊழியர்களையும் அவர்கள் தாக்கி, கார்களை சேதப்படுத்தினர்.
சூரத்தைச் சேர்ந்த இரு வேறு மதங்களைச் சேர்ந்த 22 வயது வாலிபரும், 16 வயதுப் பெண்ணும் வீட்டை விட்டு ஓடியது தொடர்பான ஒரு செய்தியை ஸ்டார் டிவி ஒளிபரப்பியது. சூரத்திலிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி வந்த கதையை அது விலாவாரியாக விளக்கியிருந்தது.
இந்த நிலையில், இந்து ராஷ்டிர சேனா என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள ஸ்டார் டிவி அலுவலகத்திற்கு வந்தனர்.
அலுவலக காவலாளியை தாக்கி விட்டு உள்ளே புகுந்த அவர்கள் அலுவலகத்தை சூறையாடினர். அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அடித்து நொறுக்கினர். ஸ்டார் டிவி செய்திப் பிரிவு செயல் தயாரிப்பாளர் சந்திரமோகன் பப்பாலா, உள்ளிட்ட ஊழியர்களையும் அவர்கள் தாக்கினர்.
இதுகுறித்து சந்திரமோகன் கூறுகையில், 70 முதல் 100 பேர் வரை உள்ளே புகுந்து கண்மூடித்தனமாக தாக்கினர். கைக்கு கிடைத்த பொருட்களையெல்லாம் போட்டு உடைத்தனர்.
சூரத் காதலர்கள் குறித்த செய்தியை இனிமேல் ஒளிபரப்பக் கூடாது. மீறி ஒளிபரப்பினால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என போகும் போது எச்சரித்து விட்டுச் சென்றனர் என்றார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் பி.ஆர். தாஸ் முன்ஷி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநில அரசு உடனடியாக ஸ்டார் டிவி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தை மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 20 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.