கிட்னி திருட்டு: 2 மருத்துவமனைகளின் உரிமம்ரத்து- அப்பல்லோவுக்கு நோட்டீஸ்
சென்னை: சிறுநீரகத் திருட்டு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இரு மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மக்களை ஏமாற்றி சிறுநீரகம் திருடப்படுவது குறித்து சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதில் கலந்து கொண்டு பேசதிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், சென்னையில் மக்களை ஏமாற்றி அவர்களுடைய சிறுநீரகங்கள் திருடப்படுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், தவறு செய்யும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளை நெறிப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படவேண்டும் என்றார்.
விவாதத்திற்குப் பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பேசுகையில், சென்னை மற்றும் திருச்சியில் சிறுநீரக திருட்டில் சம்பந்தப்பட்ட புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உரிமம் தமிழகத்தில் 54 மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 4 அரசு மருத்துவமனைகளும், 49 தனியார் மருத்துவமனைகளும், பிற மாவட்டங்களில் 26 மருத்துவமனைகளும் உள்ளன.
சிறுநீரக திருட்டு சம்பந்தமாக சென்னையில் உள்ள எம்.ஆர் மருத்துவமனை மற்றும் அஸ்வினி மருத்துவமனை ஆகியவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அப்பல்லோ, ஏ.பி.சி., வேதநாயகம் ஆகிய மருத்துவமனைகளின் உரிமங்களை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். 9 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின்போது உறவினர்கள் மட்டுமே சிறுநீரகத்தை தானமாக தரவேண்டும். அப்படி கொடுக்கும் உறவினர்கள் சொத்தில் பங்கு கேட்பதால் நோயாளிகள் தயங்குகின்றனர். இதனால் வேறு நபரிடமிருந்து சிறுநீரகம் பெறுகின்றனர்.
இதற்கு மாற்று வழி குறித்து ஆராயப்பட்டு வருகிறது. நோயாளிகளை பாதிக்காத வகையில் சிறுநீரக திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.