அமெரிக்கா: கொலையாளி தென் கொரியமாணவர்: காதல் தோல்வியால் வெறியாட்டம்!
வாஷிங்டன்:விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் 32 பேரின் உயிரைப் பறித்த நபர் தென் கொரியாவைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்கள்:
கொலையாளியின் பெயர் சோ சியூங் ஹூ (23). கடந்த 1992ம் ஆண்டு விர்ஜீனியா மாநிலம் சென்டர்வில்லி நகருக்கு குடி பெயர்ந்தார். அவருடன் அவரது பெற்றோரும் உடன் தங்கியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்து வந்தார் சோ. க்ரீன் கார்டு ஹோல்டரான சோ, காதல் தோல்வி காரணமாக இந்த கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவரது காதலி, திடீரென சோவை கைவிட்டுள்ளார். இதனால் அவரிடம் பேசுவதற்காக விடுதிக்குச் சென்றுள்ளார். காதலியின் அறைக் கதவைத் தட்டியுள்ளார். ஆனால் காதலி அங்கு இல்லை. அவரது தோழிதான் இருந்தார்.
அவரிடம் காதலி எங்கே என்று சோ கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி சரியாக பதில் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சோ, அந்தப் பெண்ணை சுட்டுக் கொன்றார். இதுதான் முதல் கொலை. அதைப் பார்த்து விட்டு ஓடி வந்த இன்னொரு மாணவரையும் சோ சுட்டுக் கொன்றார்.
பின்னர் அங்கிருந்து வெறி பிடித்தவர் போல காதலியைத் தேடி அலைந்துள்ளார். இறுதியில் நோரிஸ் ஹால் கட்டடத்தில் உள்ள வகுப்பறையில் அவர் இருப்பதாக தெரிந்து அங்கு சென்றார்.
அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்கள், மாணவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சோவின் பெற்றோரிடமும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்களின் முகவரியைக் கொடுக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதற்கிடையே, கொலையாளி தென் கொரியாவைச் சேர்ந்தவர் என்பதால் அமெரிக்காவில் தென் கொரியர்களுக்கு எதிராக வன்முறை வெடிக்கலாம் என அந்நாட்டு அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரிய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தென்கொரிய அமைப்புகள் மற்றும் அமெரிக்க அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.