அட்சய திரிதியை: நகைக் கடைகளில் விழாக்கோலம்
சென்னை:அட்சய திரிதியை தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் திருவிழாக் கூட்டம் காணப்படுகிறது. மக்கள் நகை வாங்க அலைமோதுகின்றனர்.
இன்று அட்சயதிரிதியை தினமாகும். இந்த நாளில் நகை உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் வீட்டில் சுபிட்சம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படி ஒரு பழக்கம் தமிழகத்தில் இல்லை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அட்சிய திரிதியையன்று நகை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த ஆண்டு அட்சிய திரிதியை தினம் 2 நாட்கள் நீடிக்கிறது. இன்று முதல் நாளை காலை 10 மணி வரை நகை வாங்கலாம் என ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
இன்று காலை முதலே நகைக் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது. குறிப்பாக சென்னை நகரில் உள்ள நகைக் கடைகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.
நகைக் கடைகள் அதிகம் உள்ள தி.நகரில்தான் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. தி.நகரில் மட்டும் இன்றும் நாளையும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் நகை வாங்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி தி.நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகைக் கடைகளில் மாறு வேடத்தில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போல இந்த முறையும் செய்யப்பட்டுள்ளது. தி.நகரில் உள்ள பிரகாசம் சாலை, உஸ்மான் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.